மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா; இதுவரை போலீஸ் துறையை சேர்ந்த 2,557 பேர் பாதிப்பு: 30 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா; இதுவரை போலீஸ் துறையை சேர்ந்த 2,557 பேர் பாதிப்பு: 30 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை போலீஸ் துறையைச் சேர்ந்த 2557 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நோய் தாக்குதல் 2 லட்சத்தை தாண்டி உள்ளது. தற்போது தினமும் 8 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போலீஸ் துறையின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. அதேவேளையில் கொரோனா வைரஸ் தொற்றால் அவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒருவர் உயிரழந்துள்ளார். தற்போது வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் போலீஸ் துறையைச் சேர்ந்த 2,557 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை