முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தினமலர்  தினமலர்
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அபிராமபுரம் : முதல்வர் வீடு மற்றும் தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை, 9:40 மணிக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு மர்ம நபர் பேசியுள்ளார்.அப்போது அவர், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இ.பி.எஸ்., வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில், வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் கூறி, இணைப்பை துண்டித்துள்ளார்.

உடனே, காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு இடங்களிலும், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்தது. ஆனால் எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, 'வெடிகுண்டு மிரட்டல்' புரளி என்பது தெரியவந்தது.

அதேநேரம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசியவர் எண் குறித்து, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மர்மநபர் பேசியது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த மர்ம நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை