ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசின் முக்கிய துறைகளான உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வர்த்தகம் உள்பட 9 அரசுதுறைகளில் பயன்படுத்தப்படும் கணினிகளில் ரஷ்ய ஹேக்கர்கள் கடந்தாண்டு ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாககுற்றச்சாட்டு எழுந்தது. இது மட்டுமின்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மறைமுகமாக உதவியதாகவும் ரஷ்யா மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நேற்று பதிலடி கொடுத்தது. தனது நாட்டில் செயல்பட்டு வரும் ரஷ்ய தூதரகத்தின் 10 அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. மேலும், ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் 30 தனிநபர்கள், நிதி நிறுவனங்களின் மீதும் பொருளாதார தடை விதித்தது.