ஆன்லைன் மோசடியால் ஏமாறும் எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள்

தினமலர்  தினமலர்
ஆன்லைன் மோசடியால் ஏமாறும் எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள்

புதுடில்லி:ஆன்லைன் மோசடிக்காரர்கள், எல்.ஐ.சி., பாலிசிதாரர்களை ஏமாற்ற துவங்கி இருப்பதாகவும்; பாலிசிதாரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், எல்.ஐ.சி., அறிவுறுத்தி உள்ளது.

ஆன்லைன் மூலமாக, மக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றி பறிக்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில், மோசடிக்காரர்கள் தற்போது, எல்.ஐ.சி., பாலிசிதாரர்களிடமும் தங்கள் கைவரிசையை காட்டத் துவங்கி இருக்கின்றனர்.எல்.ஐ.சி., அலுவலகத்தில் இருந்தோ அல்லது காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்திலிருந்தோ பேசுவதாக கூறி, ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள்.

கைவசம் இருக்கும் பாலிசியை சரண்டர் செய்துவிட்டு, அதிக வருவாய் தரும் பாலிசிக்கு அதை மாற்றிக் கொள்ளலாம் என ஆசை காட்டி, தகவல்களை பெற்று, பணத்தை சுருட்டி விடுகிறார்கள். எனவே சரண்டர் செய்தால், அதிக பணம் பெற்று தருகிறோம் என்பது மாதிரி யாரேனும் போன் மூலம் தொடர்பு கொண்டால், காவல் துறைக்கும், எல்.ஐ.சி.,க்கும் தகவல் தெரிவிக்குமாறும்; ஏமாறாமல் கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது எல்.ஐ.சி.,அத்துடன், தற்போது செயல்பாட்டில் இருக்கும் பாலிசிகளை சரண்டர் செய்யுமாறு, எல்.ஐ.சி., ஒருபோதும் கேட்காது என்றும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை