தீபாவளி போல தமிழ்ப் புத்தாண்டிலும் ஓடிடி-யில்தான் புதிய ரிலீஸ்

தினமலர்  தினமலர்
தீபாவளி போல தமிழ்ப் புத்தாண்டிலும் ஓடிடியில்தான் புதிய ரிலீஸ்

கொரோனா காலத்தில் ஓடிடியில் புதிய படங்கள் நேரடியாக வெளியாக ஆரம்பித்தன. தமிழ் சினிமாவில் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி ஆகிய பண்டிகை நாட்கள் தியேட்டர்களில் புதிய படங்களின் வெளியீட்டிற்கு ஒரு கொண்டாட்டமான நாளாக அமையும்.

ஓடிடியில் நேரடி வெளியீடு என்று வந்த பிறகு, கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் தியேட்டர்களை விட ஓடிடியில் தான் களைகட்டியது. அப்போது 'சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன்' ஆகிய படங்கள் ஓடிடியிலும். டிவியில் நேரடியாக 'நாங்க ரொம்ப பிஸி' திரைப்படமும் ஒளிபரப்பானது.

தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியான 'பிஸ்கோத், இரண்டாம் குத்து' உள்ளிட்ட படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. மாறாக ஓடிடியில் வெளிவந்த இரண்டு படங்களும் வரவேற்பைப் பெற்றன.

பொங்கலுக்கு கொரோனா ஓரளவிற்குத் தணிந்து இருந்ததால் ஓடிடியில் புதிய படங்கள் வெளியாகவில்லை. தியேட்டர்களில் வெளியான 'மாஸ்டர்' 50 சதவீத இருக்கைகளிலேயே பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

இப்போது மீண்டும் கொரோனா தலையெடுத்துள்ளது. இன்று தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தியேட்டர்களில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை. மாறாக ஓடிடி தளங்களில் இரண்டு புதிய படங்கள் வெளியாகின்றன. த்ரிஷா நடித்துள்ள 'பரமபத விளையாட்டு' படமும், கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ள 'மதில்' படமும் இன்று வெளியாகின்றன.

இன்று டிவியில் நேரடியாக வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'வணக்கம்டா மாப்ள' படத்தின் வெளியீடு டிவியிலிருந்து ஓடிடிக்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஓடிடி தளத்தில் வெளியாகி பின்னர் டிவியில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர்.

இப்படியே கொரோனா தொடர்ந்தால் தியேட்டர்களின் முன்னுரிமை ஓடிடி தளத்திற்கு மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூலக்கதை