ஈரானில் அணு உலையில் பயங்கர வெடிவிபத்து!: யுரேனியம் செறிவூட்டலை தொடங்கிய மறுநாளே விபரீதம்..இருளில் மூழ்கியது அணு உலை மையம்!!

தினகரன்  தினகரன்
ஈரானில் அணு உலையில் பயங்கர வெடிவிபத்து!: யுரேனியம் செறிவூட்டலை தொடங்கிய மறுநாளே விபரீதம்..இருளில் மூழ்கியது அணு உலை மையம்!!

தெஹ்ரான்: ஈரானில் யுரேனியம் செறிவூட்டலை தொடங்கிய மறுநாளே நடான்ஸ் அணு உலை மையத்தில் நேரிட்ட பயங்கர வெடிவிபத்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நடான்ஸ் அணு உலை மையத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்ட தொடங்கிய சிலமணி நேரத்தில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதனால் ஆலையின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்தது. மேலும் ஆலையின் மின் விநியோகம் தடைப்பட்டதால் அணு உலை வளாக பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. எனினும் இந்த விபத்தால் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நடான்ஸ் அணு உலை மையம் இருளில் மூழ்க பயங்கரவாத தாக்குதலே காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரான் அணுசக்தி மையம் தெரிவித்ததாவது, யுரேனியம் செறிவூட்டலுக்கான பகுதிக்கு மின்சார விநியோகம் செய்யும் பாதையில் விபத்து நேரிட்டுள்ளது. இதனால் மின் விநியோகம் அடியோடு தடைபட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ, கதிர்வீச்சோ இல்லை என குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலால் ஆலையில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை என்று ஈரான் அணுசக்தி மையத்தை சேர்ந்த பெஹ்ரூஸ் கமல்வென்டி தெரிவித்தார். இந்த தாக்குதல் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாடுகளிடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் மேற்குலகுடனான பேச்சு தொடருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

மூலக்கதை