இத்தாலி மாலுமிகள் மீதான கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தினமலர்  தினமலர்
இத்தாலி மாலுமிகள் மீதான கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடில்லி : இரண்டு இந்திய மீனவர்களை, இத்தாலி மாலுமிகள் சுட்டுக் கொன்ற வழக்கில் மத்திய அரசின் மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

கடந்த, 2012 பிப்ரவரியில் இத்தாலியை சேர்ந்த, 'எம்வி என்ட்ரிக்கா லெக்ஸி' என்ற எண்ணெய் கப்பல் வந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு இந்திய மீனவர்கள் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கடல் கொள்ளையர் என, தவறாக நினைத்து, இத்தாலிய கப்பலில் இருந்த மிஸிமிலினோ லத்தோர், சால்வடோர் ஜிரோன் என்ற இரு மாலுமிகள், 2 மீனவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு இந்திய மீனவர்கள் பலியாயினர்.

இந்த வழக்கில், இத்தாலி மாலுமிகள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவருக்கும், 2014 மற்றும் 2016 காலகட்டத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இருவரும் தங்கள் நாட்டுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கை முடித்து வைக்குமாறு, மத்திய அரசு, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மீனவர்கள் குடும்பத்தினரை விசாரிக்காமல், வழக்கை முடித்து வைக்க முடியாது என்றும் மீனவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், ஏப் 6-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டு விட்டதாகவும், அவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரினர். இதையடுத்து, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை