2 வாரத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் செயற்கை மழை உருவாக்கி காட்டுத் தீயை அணையுங்கள்: உத்தரகாண்ட் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
நைனிடால்: உத்தரகாண்ட் மாநில வனப்பகுதியின் பல்வேறு பகுதிகளில் பற்றி எரிந்த காட்டுத் தீ சம்பவங்களால் இம்மாதம் மட்டும் 645.3 ஹெக்டேர் பரப்பளவு காடு தீயில் கருகியது. இதனிடையே, நேற்று முன்தினம் மேலும் 75 இடங்களில் காட்டுத்தீ பரவியதில் 106 ஹெக்டேர் வனப்பகுதி நாசமானது. தற்போது, புதிதாக 4 மாவட்டங்களில் மட்டும் 40 இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. இதனால், இம்மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காட்டுத்தீ தொடர்பான பொதுநலன் மனுவை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்தது. தலைமை நீதிபதி அலோக் குமார் வர்மா தலைமையிலான அமர்வு நேற்று இதை விசாரித்தபோது, ‘செயற்கை மழையை உருவாக்கி காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியை செய்ய வேண்டும். 2 வாரங்களுக்குள் தீயை அணைக்க வேண்டும். கிராம பஞ்சாயத்துக்களை வலுப்படுத்தி காடுகளில் தீ பரவுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டனர்.