மகளிர் சர்வதேச கால்பந்து இந்தியா - பெலாரஸ் இன்று மோதல்

தினகரன்  தினகரன்
மகளிர் சர்வதேச கால்பந்து இந்தியா  பெலாரஸ் இன்று மோதல்

புதுடெல்லி: இந்தியா - பெலாரஸ் மகளிர் கால்பந்து அணிகள் மோதும் நட்பு ரீதியிலான சர்வதேச போட்டி, உஸ்பெகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது. உஸ்பெகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் இந்திய மகளிர் கால்பந்து அணி 2 நட்பு ரீதியிலான சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. உஸ்பெகிஸ்தான் அணியுடன் நடந்த முதல் போட்டியில் கடுமையாகப் போராடிய இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. அடுத்து இந்தியா - பெலாரஸ் அணிகள் மோதும் போட்டி, தாஷ்கன்ட் ஏஜிஎம்கே ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30க்கு தொடங்கி நடைபெறுகிறது.இந்த 2 சர்வதேச போட்டிகளுக்குமான இந்திய அணி கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த இந்துமதி கதிரேசன் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழக காவல் துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பெலாரஸ் அணியுடனான் போட்டி குறித்து இந்திய அணி தலைமை பயிற்சியாளர் மேமோல் ராக்கி கூறுகையில், ‘பிபா தரவரிசையில் பெலாரஸ் அணி நம்மை விட சில இடங்கள் கீழே இருந்தாலும், வலுவான ஐரோப்பிய அணிகளுடன் மோதிய அனுபவம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். கடுமையான போட்டியை கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இந்த சவாலுக்கு இந்திய வீராங்கனைகள் தயாராக இருக்கிறார்கள். நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.

மூலக்கதை