கொரோனா பாதிப்பு உயர்வால் தடுப்பூசி ஏற்றுமதி குறையும்

தினமலர்  தினமலர்
கொரோனா பாதிப்பு உயர்வால் தடுப்பூசி ஏற்றுமதி குறையும்

வாஷிங்டன்:''இந்தியாவில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், உலக நாடுகளுக்கான தடுப்பூசி சப்ளை செய்வது குறையும்,'' என, தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான, சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், இதுவரை இல்லாத வகையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, 'காவி' எனப்படும், தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான, சர்வதேச கூட்டமைப்பின் தலைமைச் செயல் தலைவர் சேத் பெர்க்லி கூறியதாவது:இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், உள்நாட்டில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, உலக நாடுகளுக்கு இந்தியாவின் தடுப்பூசி குறைவாகவே கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில், ஒன்பது கோடி, 'டோஸ்' தடுப்பூசி கிடைக்கும் என, எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை, மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளது.

அமெரிக்கா, 'மாடர்னா, பைசர், ஜான்சன் அண்டு ஜான்சன்' ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுடன், நோவாவேக்ஸ், ஆஸ்ட்ராஜெனகா ஆகியவற்றின் தடுப்பூசி மருந்துகளையும் பெற்று வருகிறது.அதனால், அமெரிக்கா உள்ளிட்ட பிற வளமான நாடுகள், உலக நாடுகளுக்கு, கொரோனா தடுப்பூசியை சப்ளை செய்யும் என, நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியா, பல நாடுகளுக்கு மொத்தம், 481 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசி சப்ளை செய்துள்ளது. அதில், 73.59 லட்சம் டோஸ், இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

'சீரம் நிறுவனம் இந்தியாவின் பாக்கியம்'

உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் கூறியதாவது:இந்தியாவில், தடுப்பூசி போடும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்; இது உலகின் அனைத்து நாடுகளும் உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை. எனவே, வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமின்றி, ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசிகளை விரைவாக வழங்குவது அவசியம்.

இந்த ஆண்டு மத்தியில், உலக வங்கியுடன், 50 நாடுகளுக்கான நிதி ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த நிதியின் வாயிலாக, அந்த நாடுகள், தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் இந்தியா நிறுவனத்துடன், எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம், அங்கு அமைந்திருப்பது, அந்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை