மகனை கொலை செய்துவிட்டு காணவில்லை என, போலீசில் புகார் கொடுத்த தாய்

தினமலர்  தினமலர்
மகனை கொலை செய்துவிட்டு காணவில்லை என, போலீசில் புகார் கொடுத்த தாய்

ஓஹியா:அமெரிக்காவில், 6 வயது மகனை காரை ஏற்றி கொன்றுவிட்டு, காணவில்லை என, போலீசில் புகார் கொடுத்த தாயையும், அவரது காதலனையும், போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் ஓஹியா மாகாணம், மிடில்டவுன் நகரைச் சேர்ந்தவர் பிரிட்னி கோஸ்னி, 29. இவரது காதலன் ஜேம்ஸ் ஹாமில்டன், 42. கோஸ்னிக்கு, மூன்று குழந்தைகள். இந்நிலையில், கடந்த 26ம் தேதி, போலீசில் கோஸ்னி அளித்த புகாரில், 'என் மூன்று குழந்தைகளுடன், வீட்டருகே உள்ள பூங்காவுக்கு சென்றிருந்தேன்.

அங்கு, என், 6 வயது மகன் ஜேம்ஸ் ஹட்சின்சன் காணாமல் போய்விட்டான். அவனை கண்டுபிடித்து தர வேண்டும்' என, கூறியிருந்தார்.இதையடுத்து, ஹட்சின்சனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இரண்டு நாட்களாகியும், ஹட்சின்சன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, கோஸ்னியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். முதலில் மழுப்பிய அவர், பின், மகனை காரை ஏற்றிக் கொன்றதை ஒப்புக் கொண்டார். இது பற்றி போலீசார் கூறியதாவது:கோஸ்னியும், அவரது காதலர் ஹாமில்டனும், மூன்று குழந்தைகளுடன், காரில் பூங்காவுக்கு சென்றுள்ளனர்.

பூங்காவை ஒட்டியிருந்த ஆற்றின் கரையருகே, ஹட்சின்சனை விட்டுவிட்டு, மற்ற இரண்டு குழந்தைகளுடன், காரில் ஏறியுள்ளனர். இதைப் பார்த்த ஹட்சின்சன், காரை நோக்கி ஓடி வந்துள்ளான், அப்போது, அவன் மீது, கோஸ்னி காரை ஏற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஹட்சின்சன், ரத்த வெள்ளத்தில் விழுந்துவிட்டான். அரை மணி நேரம் கழித்து, பூங்காவுக்கு வந்த கோஸ்னியும், ஹாமில்டனும், அங்கு இறந்து கிடந்த ஹட்சின்சனை துாக்கி, ஆற்றில் வீசியுள்ளனர். பின், போலீசில் மகனை காணவில்லை என, புகார் செய்துள்ளனர்.கோஸ்னியையும், ஹாமில்டனையும் கைது செய்துள்ளோம். மகனை கொன்றதற்கான உண்மையான காரணத்தை, கோஸ்னி இன்னும் கூறவில்லை. அவரது மற்ற இரு குழந்தைகளை மீட்டு, பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துள்ளோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.

மூலக்கதை