ராகுல் 'விசிட்' ஓட்டாக மாறுமா? கிறிஸ்துவர்களை வளைக்க வியூகம்!

தினமலர்  தினமலர்
ராகுல் விசிட் ஓட்டாக மாறுமா? கிறிஸ்துவர்களை வளைக்க வியூகம்!

தேர்தல் பிரசாரம் செய்ய, குமரி மாவட்டம் வந்த ராகுல், பகவதியம்மன் கோவிலுக்கு செல்லாததும், அவரை கிறிஸ்துவ தலைவராக காட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டதும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

காங்கிரஸ் வசம் இருந்த ஹிந்து ஓட்டுகள், பா.ஜ., வசம் மாறி வருகின்றன. இதனால், சிறுபான்மை ஓட்டுகளை அள்ளுவதற்கு, காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற பெயரில், கிறிஸ்துவர், முஸ்லிம்களுக்கு சலுகை காட்டி வருகிறது. குமரியில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல், ரோட்டோரம் காற்று வாங்குவது, டீக்கடையில் டீ குடிப்பது, செல்பி எடுப்பது, குடிசை வீடுகளுக்கு செல்வது, என சுற்றி வந்தார். அவரது சுறுசுறுப்பும், நிதானமான பேச்சும் மக்களை கவர்ந்தது. ஆனால் அவை ஓட்டாக மாறுவதாக தெரியவில்லை.

நேரு, இந்திரா, ராஜிவ் என ராகுலின் குடும்பத்தை சேர்ந்த அனைவரும், குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அந்த சூழ்நிலையுடன் ஒப்பிடும் போது, ராகுல் 'விசிட்' சற்று வித்தியாசமாகவே இருந்தது.அவர்களின் பிரசாரத்தில், எந்தவித மத சாயமும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால், ராகுல் வருகை மத சாயத்துடனே இருந்தது. கடற்கரையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு, ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய ராகுலை, அருகில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு, கட்சி பிரமுகர்கள் அழைத்து செல்லவில்லை.

இந்திரா, இந்த கோவிலுக்கு வந்துள்ளார். கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் பேசிய பின், முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு பள்ளி வளாகத்தில் உள்ள சர்ச்சில், சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகுலிடம் கேள்வி கேட்க தேர்வு செய்யப்பட்டவர்களில், பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவ மாணவர்களே.

12க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல், இம்மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து கோவிலுக்கு கூட செல்லவில்லை.இதன் மூலம், ராகுலை கிறிஸ்துவ தலைவராக காட்டிக் கொள்வதில், காங்., நிர்வாகிகள் வெற்றி கண்டுள்ளனர்.நேரு, இந்திரா காலம் முதல் காங்கிரசை ஆதரிக்கும் பெரும்பான்மை சமுதாய வாக்காளர்கள் இதை வேதனையோடு, பார்க்கின்றனர்.

'மதச்சார்பின்மை பேசியபடி மதச்சார்பாக நடப்பது காங்கிரசை மேலும் உருக்குலைக்கும்' என, அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

மூலக்கதை