ஐஎஸ்எப் கட்சியை சேர்த்ததால் மேற்கு வங்க காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு: ஆனந்த் சர்மா எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
ஐஎஸ்எப் கட்சியை சேர்த்ததால் மேற்கு வங்க காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு: ஆனந்த் சர்மா எதிர்ப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணியில் இந்திய மதச்சார்பற்ற முன்னணியை (ஐஎஸ்எப்) சேர்ந்ததை காங்கிரஸ் மூத்த  தலைவர் ஆனந்த் சர்மா கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சிகள்  இணைந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தல் பரப்புரையை தொடங்கி உள்ளன. இக்கூட்டணியில் புதிய கட்சியான இந்திய மதசார்பற்ற முன்னணியை  சேர்த்ததற்கு காங்கிரஸின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், ‘‘அப்பாஸ் சித்திக்கைத் தலைவராகக் கொண்டு செயல்படும் இந்திய மதசார்பற்ற முன்னணி  அடிப்படைவாத சித்தாந்தத்தைக் கொண்டது. காந்தியும், நேருவும் கனவு கண்ட மதசார்பின்மைத் தத்துவத்துக்கு எதிராக அக்கட்சியுடன் காங்கிரஸ்  கூட்டணி அமைத்துள்ளது. இந்த முடிவு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இதனால்  மேற்கு வங்க காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு எழுந்துள்ளது. ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரஸின் மூத்த அதிருப்தி தலைவர்களில் ஒருவர்  ஆனந்த சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை