அரசுக்கு சொந்தமான இடங்களில் மண் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: தாசில்தார் எச்சரிக்கை
சாம்ராஜ்நகர்: சட்டவிரோதமாக அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் விவசாய நிலங்களிலிருந்தும் மண் கடத்தும் குத்தகைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தாசில்தார் குணால் எச்சரிக்கை விடுத்தார். சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா தனகரே கிராமப்பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களிலிருந்தும், விவசாயிகளிடம் பண ஆசைகாட்டி விவசாய நிலத்திலிருந்து மண்ணை சட்டவிரோதமாக கடத்தி சென்று குத்தகைதாரர்கள் சாலை பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து கொள்ளேகால் தாசில்தார் குணால் அதிகாரிகளுடன் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாலை பணிகளை குத்தகை எடுத்துள்ள குத்தகைதாரர்கள் விவசாயிகளுக்கு ஒரு லோடுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணத்தாசை காட்டி விவசாய நிலங்களிலிருந்தும், அரசுக்கு சொந்தமான நிலங்களிலிருந்தும் சட்ட விரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஆய்வு செய்து மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’. இவ்வாறு தாசில்தார் குணால் தெரிவித்தார்.