சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் (78) சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடுதிரும்பினார். இந்நிலையில், அமிதாப் பச்சனின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அமிதாப் பச்சன் தனது சமூகவலைப்பதிவில் தெரிவித்துள்ளார். ஒரே ஒரு வரியில் அவர் வெளியிட்ட பதிவில், ‘உடல்நிலை மோசம்... அறுவை சிகிச்சை ... எதையும் எழுத முடியாது’ என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். முன்னதாக ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சன் காயமடைந்தார். அப்போதிருந்து, அமிதாப்பின் உடல்நிலை மிகவும் பலவீனமடைந்து வந்தது. அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு, கொரோனா தொற்று பாதித்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தி மொழியில் டான், சோலே, அக்னிபாத், கூலி, பிகு, பா உள்ளிட்ட 190 திரைப்படங்களில் நடித்துள்ள அமிதாப் பச்சனுக்கு அண்மையில் ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டது. அவர் தற்போது ‘கௌன் பனேகா குரோா்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதுடன், திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.