கண்காணிப்பு! தேர்தல் விதிமுறைகள் அமல் ... மதுரை மாவட்டத்தில் 992 பதட்டமான ஓட்டுச்சாவடிகள்

தினமலர்  தினமலர்
கண்காணிப்பு! தேர்தல் விதிமுறைகள் அமல் ... மதுரை மாவட்டத்தில் 992 பதட்டமான ஓட்டுச்சாவடிகள்

மதுரை : ''மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து பத்து சட்டசபை தொகுதிகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு நடக்கிறது. 992 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன,'' என, மதுரையில் கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

தேர்தல் விதிகளை பின்பற்றுவது குறித்து அனைத்து கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, துணை கமிஷனர் சிவபிரசாத், எஸ்.பி., சுஜித்குமார், மாநகராட்சி துணை கமிஷனர் ராஜேந்திரன், ஆர்.டி.ஓ.,க்கள் முருகானந்தம், ரமேஷ், ராஜ்குமார், சவுந்தர்யா, மாநகராட்சி உதவி கமிஷனர்கள், தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். பின் கலெக்டர் கூறியதாவது: பத்து தொகுதிகளிலும் தலா மூன்று பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ குழுவினர் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிடைக்கும் புகார்கள் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து நடவடிக்கை எடுப்பர். தேர்தல் மேலிட பார்வையாளர், செலவின பார்வையாளர் விரைவில் நியமிக்கப்படுவர். வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது, ஜாதி, மத மோதல்களை துாண்டும் வகையில் பிரசாரம் செய்வதை தவிர்ப்பது குறித்து அரசியல் கட்சியினருக்கு விளக்கப்பட்டுள்ளது. அழிக்காத அரசியல் கட்சி விளம்பரங்கள் உள்ளிட்ட புகார்கள் குறித்து சி விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். அரசியல் கட்சியினர் ஆன்லைன் மூலம் தேர்தல் அதிகாரிகளிடம் கூட்டம், பிரசாரத்திற்கு அனுமதி பெறலாம்.

மாவட்டத்தில் 21 இடங்கள் பொதுக்கூட்டம் நடத்த போலீசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளது. 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.பத்து தொகுதிகளிலும் மொத்தம் 3856 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 1 முதல் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். தேர்தல் பணிகளில் 18,508 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். வணிகர்கள் ரூ.50 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்லலாம். கூடுதலாக பணம் எடுத்து செல்லும் போது அதற்கான முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும், என்றார்.

மூலக்கதை