வினையாகும் விளையாட்டுகள் ஊஞ்சல் கயிறு, துப்பட்டா இறுகி 2 மாணவர்கள் பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் ஊஞ்சல் கயிறு, துப்பட்டா கழுத்தில் இறுகியதால் 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்தவிபின்தாசின் மகன் வைஷ்ணவ் (12). 6ம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவ் நேற்று முன்தினம் வீட்டில் ஊஞ்சலில் ஆடியபடி, சக நண்பர்களுடன் டிவி பார்த்து கொண்டிருந்தான். இந்நிலையில், ஊஞ்சல் கயிறு திடீரென வைஷ்ணவ் கழுத்தில் இறுகியது. இதில் மூச்சு திணறிய அவன் மயக்கம் அடைந்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அலறினர். சப்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அவனை மீட்டு அரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வைஷ்ணவ் பரிதாபமாக இறந்தான்.இதுபோல், எர்ணாகுளம் அருகே கோலங்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் மகன் அருண் (9). 4ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் வீட்டில் தாயாரின் துப்பட்டாவை கழுத்தில் கட்டி விளையாடி கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக துப்பட்டா கழுத்தை இறுகியது. இதில் மூச்சு திணறி மயக்கி விழுந்தான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.