தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 4,500 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 4,500 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை

சென்னை: தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக இன்று 4,500 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய கடந்த 10ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வந்தார். இங்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், வருமான வரி துறை உயர் அதிகாரிகள், அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள், எந்த தேதியில் தேர்தலை நடத்துவது, பதட்டமான வாக்குச்சாவடிகள், கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள், பண நடவடிக்கையை கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்தன. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 45 கம்பெனி துணை ராணுவ வீரர்களை முதல் கட்டமாக அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று காலை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக 4,500 துணை ராணுவ வீரர்கள் சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு அதிகாலை வந்தடைந்தனர். அவர்கள் அங்கிருந்து கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் துணை ராணுவ படையினரை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.

ஆனால் தமிழகத்தில் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே துணை ராணுவ வீரர்களை தமிழகம் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், தேர்தல் தேதிக்கு அறிவிப்பதற்கு முன்பே, தமிழகத்தில் பண நடமாட்டத்தை தடுக்க சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை