போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: தமிழகத்தில் 80% பஸ்கள் ஓடவில்லை

தமிழ் முரசு  தமிழ் முரசு
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: தமிழகத்தில் 80% பஸ்கள் ஓடவில்லை

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று துவங்கியது. இதனால், தமிழகத்தில் 80 சதவீத பேருந்துகளும், சென்னையில் 70 சதவீத பேருந்துகளும் இயங்கவில்லை.

இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக பணப்பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் எவ்விதமான முடிவும் எட்டப்படவில்லை.

கடைசியாக கடந்த 18ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் 14வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட நேரமாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை இறுதியில் தோல்வி அடைந்தது.

இதையடுத்து, போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, எச். எம். எஸ், டிடிஎஸ்எப், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், டிடபில்யூயு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி(இன்று) தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிவித்தன.

இதன்பிறகு, அரசு தரப்பில் எவ்விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், நேற்று மாலை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பில் உள்ள ஒன்பது சங்க பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து, அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் திட்டமிட்டபடி 25ம் தேதி முதல் அதாவது இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்பதை தொழிற்சங்கத்தினர் உறுதிபட தெரிவித்தனர்.
இந்தநிலையில், திட்டமிட்டபடி இன்று காலை 6 மணி முதல் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் பேருந்து பணிமனைகளின் முன்பாக போக்குவரத்து ஊழியர்கள் திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி அடையாள அட்டைகளை அணிந்திருந்தனர்.

பலர் வேலை நிறுத்த போராட்டத்தால் பணிக்கு வரவில்லை.

மயிலாடுதுறை, திருப்பூர், ராஜபாளையம், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் முழுமையாக பேருந்துகள் இயங்கவில்லை. புதுக்கோட்டை, மதுரை, திருவண்ணாமலை, கோவை, நெல்லை, தென்காசி, சாத்தூர், கோபிசெட்டிபாளையம், கும்பகோணம், தூத்துக்குடி, மரக்காணம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டது.

இதேபோல், சென்னையில் மொத்தம் 31 போக்குவரத்து பணிமனைகள் உள்ளது. நாள்தோறும் இந்த பணிமனைகளில் இருந்து 3,200க்கும் மேற்பட்ட எம். டி. சி பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த பணிமனைகளில் இருந்து 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. மீதம் உள்ள 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குறைந்தளவு பேருந்துகளே இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேட்டில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கவில்லை.

போராட்டம் குறித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது: சில போக்குவரத்து கழகங்களில் வேலைக்கு வரவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் தொணியில் சுற்றறிக்கை வந்துள்ளது.

இது போக்குவரத்து தொழிலாளிகளுக்கு பழக்கப்பட்ட விஷயம். ஒருபோதும் பயப்படமாட்டோம்.

புதிதாக ஒரு மெட்ரோ போக்குவரத்தை தொடங்குவதற்காக அரசு நிதி ஒதுக்குகிறது.

ஆனால் ஏற்கனவே உள்ள, மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு போக்குவரத்திற்கு கடன் வாங்குவோம் என கூறுவது ஏற்புடையது அல்ல. கடந்த 3 ஆண்டுகளில் பேருந்துகளில் பயணித்த 1 கோடி பயணிகளை போக்குவரத்து கழகம் இழந்துள்ளது.

40 சதவீத பேருந்துகள் காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுகின்றது. கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை வேலை போராட்டம் தொடரும்.

இன்று மதியத்திற்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுவது பாதியாக குறையும். இவ்வாறு தெரிவித்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிம் கேட்டபோது, ‘தமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்’ என்றனர்.

மெட்ரோ, மின்சார ரயில்களில் கூட்டம்

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்களில் இன்று காலை 6 மணி முதலே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

திருவொற்றியூர் வரை நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இன்று கூட்டம் அதிகாம இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த 5 நிமிடத்திற்கு ஒர ரயில் என இயக்கப்பட்டது.

காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்த சேவை இயக்கப்பட்டது. இதேபோல், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் என்ற சேவை நீட்டிக்கப்படும்.

வழக்கமாக காலை நேரங்களில் 2 ஆயிரம் பேர் வரை மட்டுமே மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவார்கள். ஆனால், இன்று 5 ஆயிரம் பேருக்கு மேல் மெட்ரோ ரயில் சேவையை காலையில் பயன்படுத்தினர்.

இதேபோல், புறநகர் ரயில்களிலும் வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம் இருந்தது.

ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம்

பல போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகள் இயங்காததால் ஷேர் ஆட்டோக்கள் இரண்டு மடங்கு கட்டணம் வசூலித்தன.

ரூ. 20 வசூலிக்கப்படும் இடங்களுக்கு ரூ. 30ம், ரூ. 40 வசூலிக்கப்படும் இடங்களுக்கு ரூ. 60ம் என அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.

.

மூலக்கதை