மும்பையில் கடுமையாகும் கொரோனா தடுப்பு விதிமுறைகள்!: முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்..!!

தினகரன்  தினகரன்
மும்பையில் கடுமையாகும் கொரோனா தடுப்பு விதிமுறைகள்!: முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்..!!

மும்பை: மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராத தொகையை 200 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தி மும்பை  மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அணியாதவர்களுக்கு, கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2020 மார்ச் முதல் 2021 பிப்ரவரி 19 வரை முகக்கவசம் அணியாத 15,71,679 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.31,79,43,400 வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கேரள எல்லைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவின் சில மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராத தொகையை 200 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தி மும்பை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிக அபராதம் வசூல் செய்வதன் மூலம் பலரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டிய சூழல் ஏற்படும். இதன் காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானவை என்பதால் விதிகளை மீறுவோர் மீது கருணைகாட்டப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை  மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். திருமணம் போன்ற சடங்குகளிலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் மணப்பெண், மணமகன் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை