கோயம்பேடு மேம்பால திறப்பு குறித்த முதல்வரின் அறிவிப்பு என்ன ஆச்சு?
அண்ணா நகர்: சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கோயம்பேடு 100 அடி சாலையும் முக்கியமானது. இச்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
சென்னை நகருக்குள் செல்லும் பேருந்துகள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்கள் என எப்போதும் இச்சாலை பரபரப்பாக இருக்கும். காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவாத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் இச்சாலையை கடப்பது மிக கடினமாக இருக்கும்.
இதையடுத்து கோயம்பேடு 100 அடி சாலையில்மேம்பாலம் கட்ட அரசு முடிவு செய்தது.
இதற்காக ரூ. 93. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய மேம்பாலம் கட்டும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், இவ்வழியாக அலுவலக பணி மற்றும் அத்தியாவசிய பணிகளுக்குக்கூட செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோயம்பேடு மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது என்றும், இதனை கடந்த டிசம்பர் மாதமே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசானி தெரிவித்தார். ஆனால், கோயம்பேடு மேம்பால பணிகள் தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனால் எப்போது மேம்பாலம் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது?
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘ காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி, அலுவலக வேலைகளுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறோம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடியும் என சொன்னார்கள்.
ஜனவரி போய் பிப்ரவரியும் முடியபோகிறது. ஆனால் மேமபாலம் எப்போது திறக்கப்படும் என்று தெரியவில்லை.
இந்த மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசலில் மாட்டிகொண்டால் சுமார் ஒரு மணி நேரம் கழித்துதான் செல்கிறோம்’’ என்றனர்.
எனவே, மேம்பால பணிகளை தீவிரப்படுத்தி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.