இலங்கை செல்வதற்காக இந்திய வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி...!

தினகரன்  தினகரன்
இலங்கை செல்வதற்காக இந்திய வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி...!

டெல்லி: இந்திய வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கை செல்வதற்காக இந்திய வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று முதன் முறையாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் இம்ரான் கான் பயணம் செய்யும் விமானம், இந்திய வான்வெளியில் பறப்பதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பயணம் செய்த விமானம், அமெரிக்கா செல்வதற்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்தது. காஷ்மீரில் மனித உரிமைமீறல் நடப்பதாக குற்றம் சாட்டி இந்திய பிரதமருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. முக்கிய தலைவர்களின் விமானங்கள் சர்வதேச வான் எல்லையை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவது வழக்கமாகும். இருப்பினும் பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்க மறுத்தது விதிமீறலாக கருதப்பட்டது. இந்த நிலையில் இன்று சர்வதேச விதிகளின்படி, இந்திய வான் எல்லைக்குள் பயணம் செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை