6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து நாராயணசாமி தலைமையிலான புதுவை காங். அரசு கவிழ்ந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து நாராயணசாமி தலைமையிலான புதுவை காங். அரசு கவிழ்ந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறப்பு சட்டசபை இன்று கூடிய நிலையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பேசிய நாராயணசாமி, தனது ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு ஆவேச உரை நிகழ்த்தினார். இதன்பின்னர் நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க ஆளுங்கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

புதுச்சேரியில் 2016ல் 15 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வர் நாராயணசாமி அமைச்சரவையில் இருந்த 2 அமைச்சர்கள் மட்டுமின்றி 2 எம்எல்ஏக்களும் தங்களது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தனர்.

ஏற்கனவே ஒரு எம்எல்ஏ ஆளுங்கட்சியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசுக்கான ஆதரவு 14ஆக இருந்தது. இதேபோல் எதிர்க்கட்சிகளும் தங்களுக்கு நியமன எம்எல்ஏக்கள் ஆதரவையும் சேர்த்து 14 பேர் இருப்பதால் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினர்.

அதன்பிறகு சட்டசபையை 22ம்தேதி மாலை 5 மணிக்குள் கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க முதல்வருக்கு, கவர்னர் உத்தரவிட்டார்.

இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமிநாராயணன், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் இருவரும் நேற்று தங்களது பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்து சபாநாயகர் வி. பி சிவக்கொழுந்திடம் கடிதம் கொடுத்தனர். இதை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக் கொண்ட நிலையில், அரசுக்கான ஆதரவும் 12 ஆக குறைந்தது.

இதனால் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியது. இதற்கிடையே நேற்று மாலை காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டிய முதல்வர் நாராயணசாமி அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

ஆனால் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சட்டசபை கூட்டத்திற்கு முன்னதாக மீண்டும் எம்எல்ஏக்களின் கருத்துக்களை கேட்டு இறுதி முடிவுக்கு வருவோம்.

அதை சட்டசபை கூட்டத்தில் வெளிப்படுத்துவோம் என்றார்.

இதனிடையே சிறப்பு சட்டசபை கூட்டத்தில் தங்களது கட்சி எம்எல்ஏக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுமென அந்தந்த கட்சிகளின் அரசு கொறடா வலியுறுத்தி இருந்தனர். எம்எல்ஏக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நியமன எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

சபையில் ஆளுங்கட்சிக்கு காங்கிரஸ்-9 (சபாநாயகர் உள்பட), திமுக-2, சுயேச்சை-1 என மொத்தம் 12 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. எதிர்க்கட்சிகள் வரிசையில் என்ஆர் காங்கிரஸ்- 7, அதிமுக-4, பாஜ நியமன எம்எல்ஏக்கள்-3 என மொத்தம் 14 பேர் இடம்பெற்றிருந்தனர்.

சட்டசபை சிறப்பு கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் வி. பி சிவக்கொழுந்து திருக்குறளை வாசித்து சபையை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது முதல்வர் நாராயணசாமி பேசினார். அப்போது தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்த அவர், சாதனைகளை பட்டியலிட்டார்.

கடந்த நான்கரை ஆண்டில் மத்திய அரசால் நிதி கிடைக்காத நிலையிலும், கிரண்பேடி பல்வேறு நெருக்கடி கொடுத்தாலும் தனது அரசு செய்த நலத்திட்டங்களை நிறைவேற்றியதாக எடுத்துக் கூறினார். கவர்னர் கிரண்பேடி, அரசுக்கு அன்றாடம் தொல்லை கொடுத்து வந்தார் என அவர் கூறினார்.

புதுச்சேரியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து எங்கள் ஆட்சியை கவிழ்க்க நினைப்பதாக அவர் கூறினார். மேலும் மக்களால் தேர்ந்ெதடுக்கப்பட்ட பிரதிநிதிகளே மக்களை ஆள வேண்டும் என்பதற்காகவே மாநில அந்தஸ்து கேட்பதாகவும், இதற்காக சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசை மத்திய பாஜ அரசு தொடர்ந்து புறக்கணித்தது என்றார்.

புதுவை சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி பேசிக் கொண்டிருந்த நிலையில், அரசு கொறடா அனந்தராமன் எழுந்து நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை உண்டா? என கேள்வி எழுப்பினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து பதிலளித்து பேசினர்.

இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி சபையில் இருந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் சபையில் இருந்து வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், பெரும்பான்மை நிரூபிக்க காங்கிரஸ் அரசு தவறி விட்டது.

இதனால் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதனால், புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விட்டது.

இதையடுத்து முதல்வர் நாராயணசாமி, கவர்னர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதனால் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்த காங்கிரஸ் அரசின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் புதிய அரசு அமையுமா அல்லது ஜனாதிபதி ஆட்சி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜவின் நியமன எம்எல்ஏக்கள் மூன்று பேரையும் சேர்த்து எதிர்க்கட்சியில் 14 எம்எல்ஏக்கள் உள்ளன. இதில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கட்சியில் 7 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

அதனால் கவர்னர் புதிய ஆட்சி அமைக்க ரங்கசாமியைத்தான் அழைக்க வேண்டும். ஆனால், பாரதிய ஜனதா தங்களுடைய ஆட்சி அங்கு அமைய வேண்டும் என்று விரும்புவதால், கவர்னர் தமிழிசை ரங்கசாமியை புதிய அரசமைக்க அழைக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் தேதி இம்மாதம் 26 அல்லது மார்ச் 3ம் தேதி அறிவிக்கப்படுவதால், கவர்னர் தமிழிசை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் முடிவைதான் எடுப்பார் என்று கூறப்படுகிறது.

.

மூலக்கதை