தேவேந்திரர் குல வேளாளர்களின் குரல்களுக்கு செவி கொடுத்தது பாஜகதான்: நிர்மலா சீதாராமன் பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேவேந்திரர் குல வேளாளர்களின் குரல்களுக்கு செவி கொடுத்தது பாஜகதான்: நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: தேவேந்திரர் குல வேளாளர்களின் குரல்களுக்கு செவி கொடுத்தது பாஜகதான் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பாஜ வணிகர் அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது.

இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். பின்னர் 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்ததற்கு நன்றி தெரிக்கும் கூட்டமும் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தொடர்பாக அவர் கலந்து கொண்டு பேசினார். பாஜ தலைவர் எல். முருகன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள், வர்த்தக அமைப்பின் தலைவர்கள் உட்பட ஏராளாமனோர் கலந்து கொண்டனர்.



கூட்டத்திற்கு பின்னர் அவர்  அளித்த பேட்டி: தமிழகத்தை புரிந்து, தமிழக மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களுடன் நின்று செயல்படக் கூடிய ஒரே தேசிய கட்சி பாஜக தான். அதனால் தான் தமிழகத்தில் பாஜ சார்பில் ஒரு உறுப்பினர் கூட பாரளுமன்றத்தில் இல்லையென்றாலும், பல்வேறு நலத்திட்டங்களை பாஜ அரசு, தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. வட மாநில, இந்தி காரர்களின் கட்சி எனவும் பிராமணர்களின் கட்சி எனவும் தொடர்ந்து மக்களிடம் பொய்யான பரப்பரப்புரையை மேற்கொண்டுவருகின்றனர்.

இது அவர்களின் பயத்தையே காட்டுகிறது. வடமாநிலங்களில் பிறப்படுத்தப்ட்டோர் உள்ளிட்ட இதர சமூகத்தை சேர்ந்த பலர் முதல்வராக உள்ளனர் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.



அனைத்து மக்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என பாஜ செயல்பட்டு வருகிறது. சங்க இலக்கியம் முதல் பல்வேறு இலக்கியங்களில் தேவேந்திர குல வேளாளர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.

இங்குள்ள கட்சிகள் பிரிவினை வாதம் பேசியபடியே உள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியலினத்தில் சேர்க்கப்பட்டனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து ஆட்சியில் இருக்கும் கட்சிகள், தமிழர்களை பற்றி தங்களுக்கு தான் தெரியும் என்று கூறும் கட்சிகள்  தேவேந்திர குல வேளாளர்களின் குரல்களுக்கு ஏன் இதுவரை செவிசாய்க்கவில்லை.

வடமாநில கட்சிகள் என கூறப்பட்ட கட்சிகள் தான் அவர்களின் குரல்களுக்கு மதிப்பளித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  

.

மூலக்கதை