இந்தியாவின் வெற்றிநடை தொடர இன்னும் சில வழிமுறைகளை கையாள வேண்டும்: பிசிசிஐ ஊழியர்களின் மாஜி சேர்மன் பேட்டி

தினகரன்  தினகரன்
இந்தியாவின் வெற்றிநடை தொடர இன்னும் சில வழிமுறைகளை கையாள வேண்டும்: பிசிசிஐ ஊழியர்களின் மாஜி சேர்மன் பேட்டி

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர், போராக மாறி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி, கடைசி டெஸ்டில் பதில் தாக்குதலில் ஈடுபட்டு ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேனில் வெற்றிக்கொடி நாட்டி தொடரைக் கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக, கடைசி டெஸ்டில் இந்திய இளம் அணி பெற்றுக்கொடுத்த வெற்றி, புளு ஆர்மி மீது இருந்த அவப்பெயர்கள் அனைத்தையும் நீக்கியது. கடைசி போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி, 2011ஆம் ஆண்டில் நாம் வென்ற உலகக் கோப்பைக்கு ஒப்பானதாகும். அப்போது கம்பீர் துவக்க வீரராக அதிரடி காட்டினார். அதே பாணியில் ஷுப்மன் கில் ஆட்டமும் இருந்தது. பினிஷராக தோனி இருந்தார். அந்த இடத்தில் ரிஷப் பந்தை வைத்து பார்ப்பதில் தவறில்லை. இது எல்லாம் கடந்த காலமாக மாறிவிட்டது. இனி வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் நேரம். அடுத்தது என்ன? என்ற கேள்விக்குப் பதிலாக, தற்போதைய நிலையை மேம்படுத்துவது எவ்வாறு எனக் கேட்பதே சிறந்ததாகும். ஆஸ்திரேலிய மைதானங்கள் அனைத்தும் பவுன்சருக்கு ஏற்ற வகையிலும், ஒவ்வொரு மைதானத்திற்கும் ஒரு சிறப்பம்சம் இருக்கும். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் போன்ற வீரர்கள் சொந்த நாட்டு மைதானம் என்பதால் எவ்வித தயக்கமும், தடையுமில்லாமல் பவுன்சரை வீசி அச்சுறுத்துவார்கள். மற்ற நாட்டு வீரர்களும் இங்கு பவுன்சர் வீசினாலும், சொந்த நாட்டில் பந்துவீசுவதுபோல் உணர்வு இருக்காது. இது அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆஸி போன்று, இந்தியாவில் பெயர் சொல்லும் மைதானங்கள், பவுன்சர் மைதானம் மிக மிக அரிதாக இருக்கிறது. இனி வரும் காலத்தில் இந்த குறைகளை நீக்கினால் மட்டுமே இந்திய அணி அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து பிசிசிஐயின் மைதானம் மற்றும் அதனுடைய ஊழியர்களுக்கு சேர்மனாக பணியாற்றிய டால்ஜித் சிங் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.கேள்வி: உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் மேம்பட்டுள்ளனவா?கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட் கண்டுகொள்ளப்படுவதில்லை. பிசிசிஐ இதற்கு முழுக் கவனம் செலுத்தவில்லை எனக் கருதுகிறேன்.கேள்வி: உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்காக மைதானத்தை தயார்ப்படுத்த பிசிசிஐ முக்கியத்துவம் அளிக்கிறதா?இதற்கு பிசிசிஐ முழுக் கவனம் செலுத்த வேண்டும். மைதான ஊழியர்களுக்கு இதற்காக வகுப்புகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சீசன் துவங்குவதற்கு முன்பும் ஜூன் மாதம் முதல் வாரம், பிறகு செப்டம்பர் மாதத்தில் வகுப்பு நடைபெறும். ஆனால், தற்போது இதுபோன்று நடப்பதில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி ஒரு கிரிக்கெட் வீரர். ஆனால், அவர் இதுபோன்ற ஆலோசனைகளை நடத்துவதில்லை.கேள்வி: மைதான காப்பாளர்களின் பணி என்ன?ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர் துவங்குவதற்கு முன், இரண்டு மாதங்களுக்கு முன்பே மைதானத்திற்கு சென்றுவிட வேண்டும். முதலில் மைதானத்தின் தன்மையை ஆராய்ந்து, புற்களைக் குறிப்பிட்ட அளவிற்கு குறைக்க அல்லது அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பௌலிங் பிட்சை பயன்படுத்த யாரையும் அனுமதிக்கக் கூடாது.கேள்வி: ஆஸிக்கு எதிராக 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதற்கு பிங்க் பந்துதான் காரணமா?முதல் இன்னிங்ஸில் இதேபோல் ஆட்டமிழந்திருந்தால் பந்தை காரணம் சொல்லலாம். ஆனால், சம்பவம் நடந்தது இரண்டாவது இன்னிங்ஸ், மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது. கால்களை சரியாகப் பயன்படுத்தியது, கிரீஸை சரியாக பயன்படுத்தாததுதான் காரணம். சில வீரர்கள் எட்ச் ஆகி அவுட் ஆகினர். அது விதி. அந்த மைதானத்தில் அதற்கு முன்பு நடைபெற்ற டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருந்தது. மோசமான செயல்பாடு, மோசமான சிந்தனை இணைந்து மோசமான நாளை உருவாக்கியது.கேள்வி: இந்தியாவில் சிறந்த மைதானங்களை உருவாக்குவதற்கு என்ன வழி?எப்படிப்பட்ட மைதானத்தையும் கடின மைதானமாக மாற்ற முடியும். பௌலிங் பிட்ச் ஈரப்பதமாகவும், புட்கள் சிறிதளவு இருந்தாலே போதும். ஸ்பின்னர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும். டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களுக்குள் முடிந்துவிடும். இதைப்போன்று இதற்குமுன் சிலமுறை உருவாக்கியுள்ளோம். ஆனால், சமீப காலமாக இதுபற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை