வெளிநாடுகளில் டாலர் கடத்திய வழக்கு: சிவசங்கருக்கு பிப். 9 வரை ரிமாண்ட்

தினகரன்  தினகரன்
வெளிநாடுகளில் டாலர் கடத்திய வழக்கு: சிவசங்கருக்கு பிப். 9 வரை ரிமாண்ட்

திருவனந்தபுரம்: டாலர் கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் பிப்ரவரி 9 வரை ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளார். கேரள தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக சுங்க இலாகா பதிவு செய்த கடத்தல் வழக்கு, அமலாக்கத்துறை பதிவு செய்த கருப்பு பணமோசடி ஆகிய வழக்குகளில், கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் டாலர்களை கடத்தியதாக சிவசங்கர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இந்த நிலையில் டாலர்கள் கடத்தல் வழக்கில் சிவசங்கரை பிப்ரவரி 9ம் தேதி வரை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் ரிமாண்ட்  செய்து உள்ளது. இதே போல சிவசங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு 1ம் தேதி பரிசீலிக்கப்படும். தங்கம் கடத்தல் வழக்கில் சிவசங்கர் ரிமாண்டில் இருந்த போது, டாலர் கடத்தல் வழக்கிலும் கைது செய்யப்பட்டார். அவரிடம் கூடுதல் விசாரணை நடத்த சுங்க இலாகா காவலில் எடுக்கும். கிரிமினல் நடைமுறைப்படி, முதல் ரிமாண்ட் காலம் முடிவடையும் பிப்ரவரி 9க்கு முன்னர் விசாரணை குழு சிவசங்கரை காவலில் வைக்க வேண்டும். இதற்கிடையே சிவசங்கருக்கு எதிராக காபிபோசா (கடத்தல் தடுப்பு சட்டம்) சுமத்தப்படுவது குறித்து சுங்க இலாகா சட்ட ஆலோசனை பெற்று உள்ளது. இருப்பினும் இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து சுங்க இலாகா எந்த தகவலையும் வெளியிடவில்லை.தங்கம் மற்றும் டாலர் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் குழுக்களுக்கு மத்திய அரசு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று சுங்க இலாகா ஆணையர் சுமித் குமார் தெரிவித்து உள்ளார். இதே போல டாலர் கடத்தல் வழக்கில் தன்னை இதுவரை சுங்க இலாகா விசாரணைக்கு அழைக்கவில்லை என்று கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

மூலக்கதை