எதுவும் இங்கு வீண் இல்லை: மாற்றி யோசித்தால் பலன் உண்டு

தினமலர்  தினமலர்
எதுவும் இங்கு வீண் இல்லை: மாற்றி யோசித்தால் பலன் உண்டு

குப்பை தொட்டியில் வீசப்படும் எந்த பொருளும் வீண் இல்லை; சற்று மாற்றி யோசித்தால், பல்வேறு வகைகளில் பயன்தரும் என்பதற்கு உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுகிறது.

நாம் துாக்கி வீசும் பொருட்கள், திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில், எப்படி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்பதை, அங்கு சென்று பார்த்தால், ஆச்சரியம் நிச்சயம்.பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து, தினமும், 8 டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அதில், மக்கும் குப்பை, மக்கா குப்பை என, தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.மக்கும் குப்பை கழிவுகளில் இருந்து, இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மக்கா குப்பை மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது.கழிவுகளில் கிடைக்கும் பழம் மற்றும் காய்கறிகளில் இருந்து, விதைகள் சேகரிக்கப்பட்டு, பல்வேறு வகையான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, மாதுளை, சப்போட்டா உள்ளிட்ட செடிகள், தற்போது, நன்கு வளர்ந்து உள்ளன.

வாழை மற்றும் பப்பாளி மரங்கள் பயன்தர துவங்கியுள்ளன.குப்பை கழிவுகளில் ஏராளமான உணவுப் பொருட்கள் இருப்பதால், அதை வீணாக்காமல் இருக்க, வான்கோழி, நாட்டுக்கோழி, முயல், புறா, வாத்து உள்ளிட்டவை வளர்க்கப்படுகின்றன.வீணாக துாக்கி வீசப்பட்டு, துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட டயர், மண்பானைகள் இங்கு நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு, அதில் செடிகள் வளர்க்கப்படுகின்றன.அடர்வனம், மூலிகை தோட்டம், பழத்தோட்டம், இயற்கை உரம், பறவைகள், என, இந்த வளாகம் குப்பை கிடங்கா, பூங்காவா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.அனைத்து ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும், இதுபோன்ற செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



மூலக்கதை