அத்தையின் நகையை திருடியவர் நண்பருடன் கைது
பெங்களூரு: அத்தையின் தங்க நகைகளை திருடிய அண்ணன் மகன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து ரூ. 7.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா சிரமள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேசம்மா. இவர் தனது தந்தையை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதனால் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று தந்தையை கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது அறையை பூட்டிக்கொண்டு தந்தையை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தந்தையை பார்த்து விட்டு மறுபடியும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது அறையின் கதவு திறக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.7.50 லட்சம் மதிப்பிலான 159 கிராம் தங்க நகைகள் திருடு போய் இருப்பது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த இவர் இது குறித்து உல்லஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆய்வு நடத்தினர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சந்தேகத்தின் அடிப்படையில் நாகேசம்மாவின் அண்ணன் மகன் புனித் (20) என்பவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது நண்பர் லோகேஷ் என்பவருடன் சேர்ந்து அத்தையின் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.