டிராக்டர் பேரணி வன்முறைக்கு எதிர்ப்பு ஓய்வுபெற்ற டெல்லி போலீசாரின் திடீர் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

தினகரன்  தினகரன்
டிராக்டர் பேரணி வன்முறைக்கு எதிர்ப்பு ஓய்வுபெற்ற டெல்லி போலீசாரின் திடீர் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் விவசாயிகளின்  டிராக்டர் அணிவகுப்பின் போதுநடந்த வன்முறை காரணமாக   தேசிய தலைநகரில் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து தடை மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக பயணிகள் தங்கள் செல்ல வேண்டிய இடங்களை அடைவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பபெற வலியுறுத்தி செவ்வாயன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போலீசார் ஏற்படுத்திய தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர். செங்கோட்டையின் மீது ஏறிய போராட்டக்காரர்கள் தேசிய கொடியை அகற்றிவிட்டு தடை செய்யப்பட்ட சீக்கியர் அமைப்பின் கொடியை ஏற்றினர். இதனால், வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் துரத்தினர். செவ்வாய்க்கிழமை  நடந்த இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 22 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசின் கூடுதல் மக்கள் செய்தி தொடர்பாளர் அனில் மிட்டல் தெரிவித்தார். இந்நிலையில், டிராக்டர் பேரணியின் போது நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி போலீசின் ஓய்வு பெற்ற முன்னாள் காவலர்கள் நேற்று ஐடிஓ பகுதியில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியின் முக்கிய சாலைகள் சிலவற்றை மூடி போலீசார் சீலிட்டனர். குறிப்பாக, கலிந்திகஞ்ச் மற்றும் நொய்டா சாலைகளுக்கு சீலிடப்பட்டதாக ட்விட்டர் மூலம் போலீசார் பயணிகளுக்கு தகவல் தெரிவித்து அலர்ட் செய்தனர். மேலும், மின்டோ சாலையிலிருந்து கன்னாட்பிளேஸ் செல்லும் சாலை, ஐடிஓ பகுதியிலிருந்து இந்தியா கேட் செல்லும் சாலைகள் மூடப்பட்டன. அதேபோன்று காஜிப்பூர் மார்க்கெட், என்எச்-9 மற்றும் என்எச்-24 சாலைகள் மூடப்பட்டது. இதனால் டெல்லியிலிருந்து காஜியாபாத் செல்லும் பயணிகள் ஷாதரா மற்றும் டிஎன்டி வழியாக செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர். இதனால் நகரில் கடும்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நேற்று நண்பகலுக்கு பிறகு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளான ஐடிஓ, மண்டி ஹவுஸ் மற்றும் இந்தியா கேட் பகுதிகளில் பேரிகார்டுகள் அகற்றப்பட்டு  வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. அதேபோன்று, திலக் பாலம் அருகே இருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டு இந்தியா கேட் நோக்கி செல்லும் ஐடிஓ சாலை திறக்கப்பட்டது. அதேபோன்று மின்டோ சாலையிலிருந்து கன்னாட்பிளேஸ் நோக்கி செல்லும் சாலையும், இந்தியாகேட் பகுதியிலுள்ள  சி-ஹெக்சான் சாலையும்  வாகன போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது.

மூலக்கதை