சீன தங்க சுரங்க விபத்து!: 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு..!!

தினகரன்  தினகரன்
சீன தங்க சுரங்க விபத்து!: 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு..!!

பெய்ஜிங்: சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தால் பூமிக்கு அடியில் சிக்கிய 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின் சாந்தோம் மாகாணத்தில் யாண்டைன் நகரில் உள்ள தங்க சுரங்கத்தில் கடந்த 10ம் தேதி நேரிட்ட விபத்தில் 22 தொழிலாளர்கள் பூமிக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்ககூடும் என கருதப்பட்ட நிலையில் தான் பூமிக்கு அடியில் 12 தொழிலாளர்கள் உயிருடன் இருப்பது கடந்த 17ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் உயிரிழக்க எஞ்சியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்திய மீட்பு குழுவினர், 2000 அடி ஆழத்தில் சிக்கியிருந்த 11 பேரை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களில் சிலரது நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிக்கிய 22 தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழக்க 11 பேர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சிய 10 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.  சீனாவில் அதிக அளவில் கனிம வளங்கள் காணப்படுகின்றன.  ஏராளமான நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில சுரங்கங்கள் மட்டுமே உரிய அனுமதி பெற்றும், முறையான பாதுகாப்பு அம்சங்களுடனும் செயல்படுகின்றன. பல சுரங்கங்கள் அனுமதி இல்லாமலும், பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமில்லாத ஆபத்தான சூழலிலும் இயங்குகின்றன. இதனால் சீனாவில் அடிக்கடி சுரங்க விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர். உலகிலேயே சீனாவில் தான் மிகவும் மோசமான மற்றும் அதிக அளவிலான சுரங்க விபத்துகள் ஏற்படுவதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை