30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
வாஷிங்டன்:அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தன் நான்கு ஆண்டு நிர்வாகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களை கூறியதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதல் உத்தரவு
இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய ராணுவ அமைச்சராக, முன்னாள் ராணுவ அதிகாரியான ஆஸ்டின் பொறுப்பேற்றுள்ளார். முதல் உத்தரவாக, ராணுவத்தில் நடக்கும் பாலியல் தாக்குதல்களை தடுப்பதற்கான திட்டங்களை மறு ஆய்வுசெய்யும்படி, அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அமைச்சராக பதவியேற்பதற்கு முன், செனட் எம்.பி.,க்கள் குழுவினர் அவரிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது, இந்தப் பிரச்னையை, எம்.பி.,க்கள் முன் வைத்தனர். இதையடுத்து, தன் முதல் உத்தரவாக, தற்போதுள்ள திட்டங்களில் எவை பலனளிப்பதாக உள்ளன என்பதை தெரிவிக்கும்படி, ராணுவ அதிகாரிகளுக்கு, ஆஸ்டின் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
டிரம்ப் உத்தரவு நீக்கம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பல்வேறு உத்தரவுகளை, அதிபராக சமீபத்தில் பதவியேற்றுள்ள, ஜோ பைடனின் நிர்வாகம் ரத்து செய்து வருகின்றது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான, டிரம்பின் இரண்டு சர்ச்சைக்குரிய உத்தரவுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், டிரம்பின் மற்றொரு உத்தரவை ரத்து செய்து, ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, வட்டார அளவில் உள்ள தகவல்களை சேகரிக்க, டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இது தேர்தலின்போது தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, வட்டார அளவில் தகவல்களை தொகுக்க தடை விதித்து, பைடன் உத்தரவிட்டுள்ளார்.