சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்தன; சசிகலா இயல்பாக சாப்பிடுகிறார், எழுந்து நடக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம்

தினகரன்  தினகரன்
சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்தன; சசிகலா இயல்பாக சாப்பிடுகிறார், எழுந்து நடக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம்

பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி குறைந்திருப்பதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் குறைந்திருப்பதாகவும், நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசிக்கும் திறன் என்று அனைத்துமே இயல்பு நிலையிலேயே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலா இயல்பாக உணவை உட்கொள்வதாகவும், பிறரின் உதவியுடன் எழுந்து நடப்பதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விக்டோரியா மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து வரும் 27-ம் தேதி விடுதலையாக இருக்கும் நிலையில் கடந்த 20-ம் தேதி சசிகலாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து தொடர்ந்து 5-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சசிகலாவுடன் சிறையில் இருந்த அவரது உறவினர் இளவரசியும் அதே மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை