இந்திய அணிக்கு மரியாதை கொடுங்கள் * இங்கிலாந்துக்கு பீ்ட்டர்சன் கோரிக்கை | ஜனவரி 24, 2021
லண்டன்: ‘‘இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழு அளவிலான பலத்துடன் இங்கிலாந்து அணி பங்கேற்க வேண்டும். இல்லை என்றால் அவர்களை அவமதித்து போல இருக்கும்,’’ என பீட்டர்சன் தெரிவித்தார்.
இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் இரு டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் பிப். 5ல் துவங்க உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணியில் முன்னணி விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிற்கு முதல் இரு போட்டியில் ஓய்வு தரப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்குப் பின் தனிப்பட்ட காரணங்களுக்காக பட்லர் நாடு திரும்புகிறார்.
இதற்கு இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் பீட்டர்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி:
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இடம் பெறும் வீரர்கள் விபரம் குறித்து பெரிய விவாதமே எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா வெல்வதைப் போல, இந்தியாவில் வெற்றி பெறுவது என்பதும் பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் முன்னணி வீரர்கள் பங்கேற்காதது இங்கிலாந்து ரசிகர்களையும், இந்திய கிரிக்கெட் போர்டையும் அவமரியாதை செய்யும் செயலாகும். முதல் டெஸ்டில் பேர்ஸ்டோவ் களமிறங்க வேண்டும். ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சனும் பங்கேற்க வேண்டும்.
இந்திய அணிக்கு எதிராக, அதன் சொந்தமண்ணில் முடிந்த வரை அதிக போட்டிகளில் பங்கேற்பதைத் தான் இங்கிலாந்து அணியின் சிறந்த வீரர்கள் விரும்புவர். அவர்களை அணியில் தேர்வு செய்யுங்கள், அதன் பிறகு ஐ.பி.எல்., அல்லது வேறு தொடர்களில் பங்கேற்று பணம் பார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.
மறுபரிசீலனை வேண்டும்
இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறுகையில்,‘‘இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் ஜோ ரூட், ஸ்டோக்சுடன் பேர்ஸ்டோவும் இடம் பெற வேண்டும். இவருக்கு முதல் இரு டெஸ்டில் ஓய்வு என்ற முடிவை இங்கிலாந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’’ என்றார்.