கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி 29ம் தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி 29ம் தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். மேலும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று பெரும் அளவில் குறைக்கப்பட்டது.



தற்போது உருமாற்றமடைந்த கொரோனா நோய்த் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், அதன் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முதல்வர் பழனிசாமி, வரும் 29ம் தேதி  மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கில் தளர்வுகள் உள்ளிட்டவை குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

புதிய அச்சுறுத்தலாக இங்கிலாந்தில் தோன்றியுள்ள உருமாற்ற கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்தும்,

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது மற்றும் தமிழகத்தில் எடுக்கவேண்டிய நடைமுறைகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை