27 மனைவியர்; 150 குழந்தைகள்: கனடா விவசாயி ரகசியம் அம்பலம்
ஒட்டாவா: கனடாவில், ஒரே பங்களாவில், 27 மனைவியர், 150 குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தும் விவசாயியின் ரகசியத்தை, அவரது பிள்ளைகளே
அம்பலப்படுத்தியுள்ளனர்.
வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பவுன்டிபுல் நகரைச் சேர்ந்தவர், வின்ஸ்டன் பிளாக்மோர், 64. விவசாயியான இவருக்கு, 27 மனைவியர் உள்ளனர். அவர்களில், 22 பேர் மூலம், 150 குழந்தைகள் பிறந்துள்ளன. இதுதவிர, 16 பேரை, இன்னும் திருமணம் செய்யாமல், துணைவியராக வைத்துள்ளார், வின்ஸ்டன்.
இந்த, 'மெகா' கூட்டுக் குடும்பத்தின் முக்கியத் தொழில், விவசாயம். குடும்ப ரகசியத்தை வெளியில் கூறக் கூடாது என, வின்ஸ்டன் தன் குடும்பத்தினருக்கு தடை விதித்துள்ளார். அந்த தடையை மீறி, அவரது மூன்று பிள்ளைகள், மொபைல் போன் செயலியில், குடும்ப ரகசியத்தை அம்பலமாக்கி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
அதில், மெர்லின் என்பவர் கூறியிருப்பதாவது:ஒரு தாய் வயிற்றில் நான் பிறந்தாலும், மற்ற, 26 பேரையும், அம்மா என்றே அழைப்பேன். ஆனால், இந்த பலதார குடும்ப முறை எனக்கு பிடிக்கவில்லை. அதனால், அமெரிக்கா சென்று, அங்கிருந்து இந்த தகவலை வெளியிடுகிறேன். நான் பிறந்த அன்று, என் தந்தையின் வேறு இரு மனைவியர், இரு குழந்தைகளை பெற்றனர். நான் மீண்டும், குடும்பத்துடன் இணைய விரும்பவில்லை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், பலதார வாழ்க்கை தடுப்பு சட்டத்தின் கீழ், வின்ஸ்டன், ஆறு மாதங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.