டாலர் கடத்தல் வழக்கில் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீண்டும் கைது: சுங்க இலாகா அதிரடி

தினகரன்  தினகரன்
டாலர் கடத்தல் வழக்கில் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீண்டும் கைது: சுங்க இலாகா அதிரடி

திருவனந்தபுரம்:கேரளாவில், தூதரகம் மூலம் நடத்தப்பட்ட  தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா, சரித்குமார் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு டாலர் கடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது.  இதில், கேரள சபாநாயகர்  ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா  திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  தங்கம் கடத்தல், லைப் மிஷன்  ஊழல் ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட, கேரள  முதல்வர்  பினராய் விஜயனின்  முன்னாள் முதன்மை செயலாளரும்,  கேரள ஐஏஎஸ்  அதிகாரியுமான சிவசங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கும்  டாலர்  கடத்திய வழக்கிலும் தொடர்பு  இருப்பதால், அவரை கைது  செய்ய அனுமதிக்க  வேண்டும்,’ என்று எர்ணாகுளம்  நீதிமன்றத்தில் சுங்க இலாகா  மனுத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த  நீதிமன்றம், அவரை கைது செய்ய அனுமதி அளித்தது. இதையடுத்து, சுங்க இலாகாவினர் நேற்று கொச்சி சிறைக்கு சென்று, சிவசங்கரை இந்த வழக்கிலும் கைது செய்தனர்.சுங்க இலாகா நடத்திய  விசாரணையில், கேரள சபாநாயகர் ராமகிருஷ்ணன் ரகசியமாக ஒரு சிம் கார்டு  பயன்படுத்தியது  தெரிய வந்தது. அவருக்கு நெருக்கமான நாசர் என்பவரின்  பெயரில் அந்த சிம் உள்ளது. நேற்று  முன்தினம் நாசரிடம்  அதிகாரிகள் பல மணி  ேநரம் விசாரித்தனர்.  அதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக  கூறப்படுகிறது.

மூலக்கதை