ரூ.730 கோடி பரிசு வேண்டுமா? - நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
ரூ.730 கோடி பரிசு வேண்டுமா?  நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் அறிவிப்பு

கலிபோர்னியா: கார்பன் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடாமல் கைப்பற்றி நீக்கும் சிறந்த தொழில்நுட்பத்தை பரிந்துரைப்பவர்களுக்கு 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.730 கோடி) பரிசளிக்கப்படும் என்று உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

தற்போது உலகம் முழுவதும், வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் பெரும் கவலைக்குரிய பிரச்னையாகியுள்ளது. தொடர்ச்சியாக அதிக பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியேற்றுவது இப்பிரச்னைக்கு முக்கிய காரணியாகும். தொழிற்சாலைகள், மின்சார உற்பத்தி, படிம எரிபொருட்கள் பயன்பாடு போன்றவற்றால் இவ்வாயுக்கள் அதிகம் வெளியேற்றப்படுகின்றன. இந்நிலையில் மின்சார கார்கள் உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கார்பன்களை கைப்பற்றி நீக்கும் தொழில்நுட்பம் பற்றி விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார்.

சிறந்த 'கார்பன் கேப்சர்' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துபவர்களுக்கு பரிசளிப்பதற்காக 100 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.730 கோடி) நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். விரிவான தகவல்களை அடுத்த வாரம் அளிப்பதாக கூறியுள்ளார். டுவிட்டரில் அவர் இத்தகவலை வெளியிட்ட சில மணி நேரங்களில் பல லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர்.

பலரும் மரம் நடுவது தான் சிறந்த வழி என்று கூறியுள்ளனர். ஒருவர் அக்கருத்தை கூறிவிட்டு, வங்கிக் கணக்கு எண் தரட்டுமா? என்று கிண்டலாக கேட்டுள்ளார். இந்திய வனப் பணி அதிகாரி பர்வீன் கஸ்வான், எலான் மஸ்கிற்கு, மாங்குரோவ் மரங்களின் படத்தை அனுப்பி, சிறந்த கார்பன் கேப்சர் தொழில்நுட்பம் என்று கூறியுள்ளார். தேவை என்றால் மேற்கொண்டு தகவல்கள் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க காடுகள் அமைப்பு மரங்கள் தான் இயற்கையான கார்பன் குறைப்பான் என்று கூறியுள்ளது. அவை காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடை இழுத்து உணவாக மாற்றுவதாகவும், அதிலுள்ள கார்பன் தாவரத்தின் ஒரு பகுதியாக மாறும், மரமாக சேமிக்கப்படும் என்கிறது. மரங்கள் இறந்த பின்பு அது சேமித்து வைத்த கார்பன் மீண்டும் வளிமண்டலத்திற்கு செல்கிறது. எனவே தான் காடுகள் அழிப்பு கார்பன் உமிழ்விற்கான மிகப்பெரிய காரணமாவதாக கூறுகின்றனர்.

மூலக்கதை