மறக்க முடியுமா? - கன்னத்தில் முத்தமிட்டால்

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா?  கன்னத்தில் முத்தமிட்டால்

படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
வெளியான ஆண்டு : 2002
நடிகர்கள் : மாதவன், சிம்ரன், கீர்த்தனா, நந்திதா தாஸ்
இயக்கம் : மணிரத்னம்
தயாரிப்பு : மெட்ராஸ் டாக்கீஸ்

போராளியாக இருக்கும் தன் தாயிடம், 'ஏன் என்னை பிரிந்து சென்றீர்?' உட்பட, 20 கேள்வி கேட்கும் சிறுமி என்பது தான், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் கரு. மணிரத்னத்தின் இன்னுமொரு, 'மாஸ்டர் பீஸ்' படைப்பு.

இலங்கை இனப் பிரச்னை பின்னணியில், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது என்றாலும், அப்போராட்டம் குறித்து, தீவிர அரசியல் பேசவில்லை. ஈழ விஷயத்தில், மணிரத்னம் விரும்பியது அமைதி. அதைத் தான், அவர் தன் படைப்பில் பிரதிபலித்தார்.

ஆங்கில செய்திதாளில் கிடைத்த ஒரு தகவலை அடிப்படையாக கொண்டு, மணிரத்னம் திரைப்படம் இயக்க முடிவு செய்தார். அந்த கருவை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் சுஜாதா, 'அமுதாவும் அவனும்' என்ற தலைப்பில், சிறுகதை எழுதினார். அதை திரைக்கதையாக மாற்றினார், மணிரத்னம்.

அமுதாவாக, பார்த்திபனின் மகள் கீர்த்தனா நடித்திருப்பார். அவ்வளவு துறுதுறு, சோகம், கோபம் என, முதல் படத்திலேயே, தேசிய விருது பெறும் அளவிற்கு நடித்திருந்தார். கீர்த்தனா, நந்திதா தாஸிடம், 20 கேள்விகள் கேட்க எழுதி வைத்து இருப்பார். அப்போது நந்திதா தாஸின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும்.

மணிரத்னம் படங்களில், மிகச் சுருக்கமாகத் தான் வசனம் இருக்கும். இப்படத்தில் சுஜாதா வசனம் எழுதியதால், நறுக்குதெறித்தது போல வசனம் இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவும், படத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தின.

இப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில், அம்ருதா என்ற தலைப்பில், 'டப்பிங்' செய்து வெளியிடப்பட்டது. தேசிய அளவில் மட்டுமின்றி, ஜெருசலேம், லாஸ் ஏஞ்சல்ஸ், ரிவர்ரன், நியூ ஹவன், வெஸ்ட்செஸ்டர் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில், இப்படம் விருதுகளை அள்ளி குவித்தது.-

கன்னத்தில் முத்தமிட்டாள் நமக்கு மனசு கனத்தது!

மூலக்கதை