ரிஷப் பன்ட் முதிர்ச்சியுடன் பேட்டிங் செய்தார்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு

தினகரன்  தினகரன்
ரிஷப் பன்ட் முதிர்ச்சியுடன் பேட்டிங் செய்தார்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு

பிரிஸ்பேன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே  பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட்டில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1  என தொடரை கைப்பற்றி கவாஸ்கர்-ஆலன்பார்டர் கோப்பையை தக்க வைத்துக்கொண்டது.  ஆட்டம் இழக்காமல் 89 ரன் விளாசிய இந்தியாவின் ரிஷப் பன்ட் ஆட்டநாயகனாகவும், 21 விக்கெட் வீழ்த்திய ஆஸி. வேகம் கம்மின்ஸ் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக இரண்டு முறை ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நடக்கும் தொடரில் வீழ்த்தி இந்தியா புதிய சாதனை படைத்து இருக்கிறது. இந்தியாவின் வரலாற்று வெற்றியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். வெற்றிக்கு பின்  ஓய்வு அறையில் வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது வீரர்கள் மத்தியில் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேசியதாவது: ரிஷப் பன்ட் வெளிநாட்டு மண்ணில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர். அவரை அணி நிர்வாகம் உறுதியாக ஆதரிக்கிறது. இறுதி போர் வீரரான அவர் தனது நரம்புகளை பிடித்து முதிர்ச்சியுடன் பேட்டிங் செய்தார். ஏனெனில் அவர் மேட்ச் வின்னர் . அவர் மோசமான பார்மில் இருந்தபோது மக்கள் அவரை விமர்சிக்கின்றனர். ஆனால் இதுபோன்ற போட்டிகளில் வெற்றிபெற அவர் உங்களுக்கு உதவ முடியும். சிட்னியில் அவர் கூடுதலாக சிறிது நேரம் நின்றிருந்தால் அதிலும் வெற்றி பெற்றிருக்க முடியும். அவர் புத்திசாலித்தனமாக இருந்தார். அதனால் தான் அவரை நாங்கள் ஆதரிக்கிறோம். அடிலெய்ட் தோல்விக்கு பின் ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக ஆடியது. முன்னணி வீரர்கள் காயத்தால் விலகியபோதிலும் இளம்வீரர்கள்  வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டனர். முதல் டெஸ்டுக்குப் பிறகு அணியுடன் இல்லாவிட்டாலும், கோஹ்லியின் உற்சாகம் முழு குழுவையும் இன்னும் பாதித்தது. இந்த அணி ஒரே இரவில் கட்டப்படவில்லை. இங்கு இல்லாத போதிலும் விராட் எங்களுடன் இருந்தார். அவரது தீவிரம் மற்ற அனைவருக்கும் தொற்றியது. ரகானே அமைதியாகத் தோன்றலாம், ஆனால் அவர் உள்ளே இருந்து ஒரு வலிமையான மனிதர். வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நடராஜனின் முயற்சிகள் பாராட்டத்தக்கது.தாக்கூர் மற்றும் சுந்தரின் 123 ரன் பாட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவின் முதுகெலும்பை உடைத்தது. சுந்தர் ஏற்கனவே 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது போல் பேட் செய்தார் புஜாரா 211 பந்துகளில் 56 ரன் எடுத்தாலும், உடலில் பல அடிகளை வாங்கினார். இந்த தொடரின் வெற்றி மறக்கமுடியாத ஒன்றாகும், இது கிரிக்கெட் உலகில் நீண்ட காலமாக நினைவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.கவாஸ்கர் பாராட்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: ரகானே தலைமையிலான அணியின் முயற்சிக்கு பாராட்டுக்கள். இளம் இநதியா நினைத்து பார்க்க முடியாததை செய்ய பயப்படவில்லை. நிச்சயமாக, இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு மாயாஜால, மந்திர தருணம். போட்டியை டிராவில் முடிக்க மட்டும் எண்ணாமல் வெற்றியுடன் சுற்றுப்பயணத்தை பெருமைக்குரியதாக முடிக்க விரும்பினர். , என்ன ஒரு அற்புதமான வெற்றி. சுப்மான் கில் மிட்செல் ஸ்டார்க் ஓவரில் 20 ரன்கள் எடுத்தார், தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்தார், இன்னிங்ஸின் உச்சியை அமைத்தார். ரிஷப் பந்த் பின்னர் 89 ரன்கள் எடுத்து இந்தியா கோட்டையை உடைக்க உதவினார். சுப்மான் கில் ஒரு அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார். புஜாரா ஒரு போர்வீரனைப் போல பேட் செய்தார். உடல், விரல் மற்றும் தலையில் அடி வாங்கினாலும் அவர் பின்வாங்கவில்லை. ஒரு முனையில் புஜாராவின் இருப்பு மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதித்ததுடன் நம்பிக்கையையும் தந்தது. ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை மீறி அவர் உயரமாக நின்றார். அவரது இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது, இந்த தொடர் வெற்றி இன்னும் அற்புதமானது, ஏனெனில் இந்த முறை ஆஸ்திரேலியா அவர்களின் முழு பலம் கொண்ட அணியைக் கொண்டிருந்தது. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். என்றார்.டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் வாய்ப்பு யாருக்கு?தொடரை வென்ற இந்தியா சாம்பியன்ஷிப் தரவரிசையில் 430 புள்ளிகளுடன், 71.7 சதவீத வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை இந்தியா 5 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. 9 வெற்றிகளும், 3 தோல்விகளும், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. நியூசிலாந்து 420 புள்ளிகளுடன், 70 சதவீத வெற்றிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 332 புள்ளிகளுடன், 69.2 சதவீத வெற்றிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இங்கிலாந்து அணி 352 புள்ளிகளுடன், 65.2 சதவீத வெற்றிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. 5வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணி 144 புள்ளிகளுடன், 40 சதவீத வெற்றிகளுடன் உள்ளது. இந்தியா அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றாலே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறலாம். அதே நேரம் இங்கிலாந்து இலங்கையை 2-0 என வீழ்த்தி இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-0 எனக் கைப்பற்றினால் 2வது இடத்தை பிடிக்க முடியும். ஆஸ்திரேலியா 2வது இடத்துக்கு முன்னேற இன்னும் 89 புள்ளிகள் தேவை. மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளை வென்று, ஒன்றில் டிரா செய்தால், 93 புள்ளிகள் கிடைக்கும். இதன் மூலம் 2வது இடத்துக்கு முன்னேறலாம். நியூசிலாந்துக்கு இனிமேல் எந்த டெஸ்ட் தொடரும் இல்லை என்பதால், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான் பைனலுக்கு தகுதி பெற முடியும்.

மூலக்கதை