ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்

தினமலர்  தினமலர்
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை வென்று, இளம் இந்திய அணி மகத்தான சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வு டுவிட்டரில் பல ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது. இந்திய அணி வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அண 294 ரன்கள் எடுத்தது.



பின், 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி சுப்மன் கில் (91), புஜாரா (56), ரிஷாப் பன்ட் (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பை வென்றது. தவிர, இம்மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக தோல்வியை தழுவியது.

இந்திய அணி வெற்றி பெற்ற நிகழ்வு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. அதிலும் நான்காவது போட்டியில் விளையாடிய பெரும்பாலானவர்கள் இளம் இந்திய வீரர்கள் ஆவர். அவர்களை வைத்து இந்திய அணி, அதுவும் அஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வெற்றி பெற்று இருப்பது வரலாற்று சாதனை என பலரும் புகழ்ந்து வருகின்றனர். விராட் கோஹ்லி, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. வீரர்கள் அடுத்தடுத்து காயங்களால் வெளியேறினர். இருப்பினும் இந்திய அணி மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. வரலாறு படைக்கப்பட்டது. என்ன ஒரு டீம், என்ன ஒரு டெஸ்ட் தொடர், இந்திய அணி விளையாடிய விதம் நம்ப முடியாதது. ரஹானேவின் சிறந்த தலைமை. அனைத்து இளம் இந்திய வீரர்களும் சிறப்பாக விளையாடினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.



இதன்காரணமாக டுவிட்டரில் #INDvsAUS, #Siraj, #IncredibleIndia, #YoungIndia, #ProudMoment, #BCCI, #brisbanetest, #pujara, #Shubmangill, #TestofChampions, #testmatch, #BleedBlue, #IndiaB, #IndiaIndia என பல ஹேஷ்டாக்குகளில் இந்திய அணியின் வெற்றியை டுவிட்டர் தளவாசிகள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டாக்குகள் அனைத்தும் டுவிட்டர் இந்தியாவில் டாப் 20-ல் டிரெண்ட் ஆகின.

ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மூலக்கதை