அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் ெதரிவித்துள்ளனர்.
புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா (93),  ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றினார்.

இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3. 30 மணி அளவில் காலமானார்.

அவரது உடல் அடையாறு புற்றுநோய் மையத்தில்  பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று மாலை காவல்துறை மறியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

கடந்த 1927ம் ஆண்டு மயிலாப்பூரில் பிறந்த இவர், நோபல் பரிசு பெற்ற உலக புகழ்பெற்ற  விஞ்ஞானி சர். சி. வி. ராமனின் உறவினர்.

புகழ்பெற்ற டாக்டர்  சந்திரசேகர் இவரது தாய்மாமா. சி. எஸ். சிவசாமி பெண்கள் மேல்நிலை பள்ளியில்  பள்ளி படிப்பை பயின்ற இவர் 1949ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர்  பட்டம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் 1955ம் ஆண்டு எம்டி  படிப்பை முடித்து உடனடியாக மருத்துவர் பணியில் சேர்ந்தார். அடையாறில்  12 படுக்கைகளுடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் தொடங்கப்பட்ட  புற்றுநோய் மையம் உலக தரம் வாய்ந்த மையமாக மாற்றுவதில் முக்கிய  பங்காற்றினார்.



மேலும், தனது குருவான டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து  அடையாறு புற்று நோய் மையத்தை உலகத்தரத்தில் சிகிச்சை அளிக்கும் மையமாக  மாற்றினார். 61 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில் பணியாற்றி தனது  வாழ்க்கையை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக அர்பணித்த மருத்துவர்  சாந்தா இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம மற்றும் மகாேசசே விருதுகளை பெற்றுள்ளார்.

இந்த விருதுகளுக்காக தனக்கு  கிடைத்த பரிசு தொகையையும் அடையாறு புற்றுநோய் மையத்திற்காக செலவு செய்தார்.
புற்றுநோய்  தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவர், உலக சுகாதார  நிறுவனத்தின் ஆலோசனை குழு, இந்திய வேளாண் ஆய்வு கழக குழுவின்  உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய புற்றுநோய்க் கழக  தலைவராகவும் செயல்பட்டு உள்ளார்.

தனது வாழ்நாளில் 60 ஆண்டுகளுக்கு மேல்  புற்று நோய் பாதித்தவர்களின் சிகிச்சைக்காக அர்பணித்த மருத்துவர் சாந்தாவின்  மரணம் மருத்துவத் துறைக்கு பேரிழப்பு என்று மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்  இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் இரங்கல்  தெரிவித்துள்ளனர்.

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில் ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்தவர் மருத்துவர் சாந்தா.

அவர் எப்போதும் நினைவுக்கூரப்படுவார். சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனம் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது.

2018ம் ஆண்டில் நான் சென்னை அடையாறு இன்ஸ்டிடியூட்டிற்கு சென்றதை நினைவு கூர்ந்து பார்த்தேன். டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது.

ஓம் சாந்தி’ என்று கூறியுள்ளார்.


.

மூலக்கதை