நாடு முழுவதும் 17ல் நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் திடீர் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் 17ல் நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் திடீர் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் வரும் 17ம் தேதி நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அந்த அட்டவணைப்படி, இந்த ஆண்டில் வரும் 17ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருந்தது. இதை கடந்த 8ம் தேதியன்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கொரோனா பரவல் காரணமாக யூகிக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, வரும் 17ம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், மறு அறிவிப்பு வரும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை