நியூசி., பார்லி., கதவை உடைத்தவர் கைது
நியூசி., பார்லி., கதவை உடைத்தவர் கைது
வெலிங்டன்: நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் உள்ள பார்லி. கட்டடத்தில் நேற்று அத்துமீறி நுழைந்த ஒருவர் கையில் இருந்த கோடாரியால் வாசல் கண்ணாடிக் கதவை சுக்கு நுாறாக உடைத்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் போது பார்லி.யில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பார்லி. கட்டடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
டெரி ஹாட்: அமெரிக்காவில் மிசோரி நகரில் ஒரு கர்ப்பிணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து வயிற்றை அறுத்து சிசுவை வெளியே எடுத்த குற்றத்திற்காக லிசா மோன்ட்கோமரி 52 என்ற பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
எஸ்டோனியா பிரதமர் ராஜினாமா
ஹெல்சோன்கி: பால்டிக் நாடுகளில் ஒன்றான எஸ்டோனியாவின் பிரதமர் ஜூரி ரதாஸ் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளும் கூட்டணி அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேறியது.
விமானப் படை தாக்குதலில் 12 பேர் பலி
பெய்ரூட்: இஸ்ரேல் போர் விமானங்கள் ஈராக் எல்லை அருகே உள்ள மயாதீன் உள்ளிட்ட மூன்று நகரங்களில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ஆயுத கிடங்குகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
லஞ்ச ஊழல்: இம்ரான் கோரிக்கை
இஸ்லாமாபாத்: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சிலர் வெளிநாட்டில் பதுக்கியுள்ள சொத்துக்கள் குறித்த விசாரணையை கைவிட லஞ்சம் கொடுக்க முயன்றதாக 'பிராட்ஷீட்' என்ற பிரிட்டன் நிறுவனத்தின் அதிபர் காவே முசாவி தெரிவித்துள்ளார். ''இந்த விவகாரம் பற்றிய அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்'' என பாக். பிரதமர் இம்ரான் கான் காவே முசாவிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.