பேஸ்புக், வாட்ஸ் ஆப்பை தடை செய்த உகாண்டா!

தினமலர்  தினமலர்
பேஸ்புக், வாட்ஸ் ஆப்பை தடை செய்த உகாண்டா!

கம்பாலா: உகாண்டாவில் அதிபர் தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களையும் தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று உகாண்டா. அங்கு 1986 முதல் தேசிய எதிர்ப்பியக்கத்தின் தலைவர் யோவெரி முசெவெனி (76) அதிபராக உள்ளார். மக்களாட்சி குடியரசு நாடான அங்கு வியாழனன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய எதிர்கட்சித் தலைவர்களில் முசெவெனிக்கு கடும் போட்டி அளிப்பவராக பாபி வைன் உருவாகியுள்ளார். 38 வயதாகும் பாபி வைன் பிரபல பாப் பாடகராக இருந்து அரசியல்வாதியானவர். அந்நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள். சராசரியாக 30 வயதுக்குள்ளானவர்கள். அவர்களில் பெரும் கூட்டம் 'புதிய உகாண்டா' என்ற பிரசாரத்துடன் பாபியை பின்தொடர்கிறது.


இந்நிலையில் இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அந்நாட்டு தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் மறு உத்தரவு வரும் வரை பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட மெசேஜிங் செயலிகள் அனைத்தையும் தடை செய்யும் படி கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவான சில பக்கங்களை பேஸ்புக் முடக்கியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி கணக்குகளை தான் அகற்றியதாக பேஸ்புக் கூறியுள்ளது.

அந்நாட்டில் பெரும்பாலான ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகள் அரசு ஆதரவாளர்களுக்கு சொந்தமானவை. முக்கிய தினசரி அரசால் நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பாபி வைன் பல ஊடகங்கள் தங்கள் பிரசாரத்தை ஒளிபரப்புவதில்லை என்கிறார். இதனால் அவர் தனது பிரச்சாரங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பி வந்தார். இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை தடுக்கும் விதமாக சமூக ஊடகங்களுக்கு தேர்தலுக்கு இரு நாள் முன்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை