ஊரடங்கில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல அழைத்து சென்ற மனைவி

தினமலர்  தினமலர்
ஊரடங்கில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல அழைத்து சென்ற மனைவி

ஒட்டாவா: ஊரடங்கு விதிமுறையில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சி சென்ற பெண், போலீசிடம் சிக்கியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை நாயாக பாவித்து நடைபயிற்சி சென்று போலீசிடம் மாட்டியுள்ளார்.

செல்லப்பிராணிகளை நடைபயிற்சி செல்லலாம் என கூறப்பட்டதால், தனது கணவரின் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளார். இதனை கவனித்த போலீசார் அவரிடம் கேட்டதற்கு, ‛நான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன்,' என்றுள்ளார். அரசின் அறிவிப்பை மீறியதற்காக தம்பதியர் இருவர் மீதும் விதிமீறலுக்கான வழக்கு பதிந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.3.44 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

மூலக்கதை