மலேஷியாவில் அவசர நிலை: மன்னர் அதிரடி அறிவிப்பு

தினமலர்  தினமலர்
மலேஷியாவில் அவசர நிலை: மன்னர் அதிரடி அறிவிப்பு

கோலாலம்பூர் : தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலேஷியாவில், மூன்று மாதங்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 ஆயிரமாக இருந்தது.சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து, பாதிப்பு எண்ணிக்கை, 1 லட்சத்து, 38ஆயிரத்து, 224 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, நாட்டின் பல பகுதிகளில் மழை, வெள்ளத்தால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற காரணங்களால், பிரதமர் முஹிதின் விடுத்த கோரிக்கையை ஏற்று, மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, நேற்று அவசர நிலை பிரகடனம் செய்தார். இதையடுத்து, முஹிதின், 'டிவி'யில், நாட்டு மக்களிடம் பேசியதாவது:

அவசர நிலையின் போது, ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட மாட்டாது. என் தலைமையிலான அரசு, தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யும்.அதேசமயம், பார்லி., மற்றும் மாநில சட்டசபைகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளன. ஆக.,1 வரை அல்லது அதற்கு முன் வரை, நிலைமையை பொறுத்து, அவசர நிலை அமலில் இருக்கும். அதுவரை பொதுத் தேர்தல் நடக்காது. இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கிடையே, முஹிதின், மலேஷியாவில் கொரோனா பரவலை தடுக்க, மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த ஆண்டு மார்ச்சில், ஆட்சிக்கு வந்த முஹிதினுக்கு, 'பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்' என, எதிர்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வந்தன.

ஆளும் கூட்டணியைச் சேர்ந்த, ஐக்கிய மலாய் தேசிய கட்சியும், ஆதரவை வாபஸ் பெறுவதாக மிரட்டி வந்தது. இதனால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டதை அடுத்து, முஹிதின், அவசர நிலையை அமல்படுத்தி, தற்காலிகமாக, பதவியை தக்க வைத்துள்ளார்.

மூலக்கதை