புனேவில் இருந்து முதல் கட்டமாக 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தது: இன்று மாலை மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புனேவில் இருந்து முதல் கட்டமாக 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தது: இன்று மாலை மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: புனே நகரில் இருந்து தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பு மருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தது. இன்று மாலை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 கட்ட ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளன.

நாடு முழுவதும் வரும் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகம் வந்தார்.

அவர் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினார். நாடு முழுவதும் வழங்குவதற்காக மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

அந்நிறுவனத்திடம் ஒரு கோடியே 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை மத்திய அரசு அளித்தது. அதன்படி, ஒரு டோஸ் தடுப்பூசி விலை ரூ. 200 ஆகும்.

ஜிஎஸ்டியுடன் சேர்த்து 210 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு முதல்கட்டமாக 5. 56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று காலை மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று காலை அளித்த பேட்டி: முதல்வர், கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்திய பிறகு தமிழகத்திற்கு 5,56,500 கொரோனா தடுப்பு மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 5,36,500 கோவிஷீல்டு, 20,000 கோவாக்சின் தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக மருந்துக் கிடங்கு உள்ள டி. எம். எஸ். வளாகத்தில் முதல்கட்டமாக தடுப்பு மருந்துகள் வைக்கப்படவுள்ளன.

இன்று காலை சுமார் 10. 30 மணியளவில் புனேவில் இருந்து தடுப்பூசி டோஸ்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் வினய் விமான நிலையத்தில் இருந்து தடுப்பு மருந்துகளை கொண்டு வரும் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது தலைமையில் மருந்து கொண்டுவரப்பட்டது.

டி. எம். எஸ் வளாகத்தில் இருந்து 10 கிடங்குகளுக்கு அந்த தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்படும்.

இதற்காக மாவட்ட வாரியாக சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் உள்ளது. தடுப்பூசி மருந்துகளை கொண்டு செல்ல சுகாதார மாவட்டங்கள் என கணக்கெடுக்கப்பட்ட மாவட்டங்களில் 45 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதற்காக 2 ஆயிரம் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது.

சுய விருப்பமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 2 கட்டங்களாக தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என வரிசைப்படுத்தி தடுப்பு மருந்துகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்துகள் வந்தாலும் சரிபார்ப்பு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் முடிவடைந்து இன்று மாலைக்கு மேல் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி துவங்கும். நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை தவிர்த்து குணமடைந்தவர்கள், பிற உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்தை தாண்டி அனைவரும் முகக் கவசம் அணிவதிலும், கைகளை சுத்தமாக கழுவுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை