ரூ.660 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவுக்கு விற்கிறது அமெரிக்கா!

தினமலர்  தினமலர்
ரூ.660 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவுக்கு விற்கிறது அமெரிக்கா!

வாஷிங்டன்: சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானத்திற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் சேவைகளை ரூ.660 கோடிக்கு இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.


சீனாவுடனான இந்திய உறவு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராணுவத்தை நவீனமயமாக்கும் முயற்சிகளில் இந்தியா இறங்கியுள்ளது. 2016 முதல் அமெரிக்காவும் - இந்தியாவும் முக்கியமான பாதுகாப்பு கூட்டாளிகளாக உள்ளனர். பாதுகாப்பு தொடர்பான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பகிர்வுகளை மேம்படுத்த இந்த நட்பு உதவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா பல்வேறு ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்தது.
இந்த நிலையில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.660 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இந்தியா பெற உள்ளது. விமான உதிரிபாகங்கள், பழுது பார்க்கும் கருவிகள். சி.ஏ.டி மற்றும் பி.ஏ.டி., எனப்படும் சிறிய ரக வெடிபொருள் சாதனங்கள், விமானங்களுக்கு எச்சரிக்கை தரும் நவீன ரேடார்கள், இலகுவான இரவு நேர பைனாகுலர்கள், உயர் ரக இரவில் பார்க்கக் கூடிய கண்ணாடிகள், ஜி.பி.எஸ்., உள்ளிட்டவை இதில் அடங்கும்.


இந்த விற்பனையின் மூலம் அமெரிக்க - இந்திய உறவு வலுப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைப்பு காங்கிரஸில் கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பிற்கும் இது உதவும் என குறிப்பிட்டுள்ளது. இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசியா பிராந்தியத்தில் அரசியல் நிலைத்தன்மை, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய சக்தியாக இந்தியா தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை