மழையால் பாதித்த பயிர்களை பாதுகாக்க அறிவியல் நிலைய அதிகாரி 'அட்வைஸ்'

தினமலர்  தினமலர்
மழையால் பாதித்த பயிர்களை பாதுகாக்க அறிவியல் நிலைய அதிகாரி அட்வைஸ்

திண்டிவனம்; மாவட்ட விவசாயிகள், வெள்ள பாதிப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிஅன்புமணி வழங்கியுள்ள ஆலோசனைகள்:நிவர் புயல் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்துள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள வயல்களில் உள்ள பயிர்களை பாதுகாத்து பயிர் சேதத்தை தவிர்க்க முடியும். எனவே விவசாயிகள் வயலில் உள்ள வடிகால் பகுதியில் தடைகள் இருந்தால், அதனை அகற்றி அருகில் உள்ள குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் வெள்ளநீர் இலகுவாக சென்றடைய வழிவகை செய்ய வேண்டும்.இதுபோன்ற வெள்ள அபாய நேரங்களில் நிலங்களில் சத்து இழப்பு ஏற்பட்டு பயிர் பாதிக்க நேரிடும். இதனை சரிசெய்ய நெற்பயிராக இருத்தால் வெள்ள நீரை வடித்து, பின் இலை வழி உரமாக ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா கரைசல் மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட்டு, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். இக்காலங்களில் நெற்பயிரில் ஏற்படும் இலை உறை நோயை கட்டுப்படுத்த புரப்பிகோனசோல் 200 மில்லி அல்லது கார்பன்டசிம் 200 கிராம், ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகையாகப் பயிராக இருப்பின், 2 சதவீதம் டி.ஏ.பி., இலை வழியாக உரமாக கொடுக்கலாம். காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து இருந்தால், தண்ணீரை வடிய செய்யவேண்டும். தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தென்னங்குருத்துப்பகுதியை நன்கு பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை