கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் செயல்படுத்த அரசு உத்தரவு

தினமலர்  தினமலர்
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் செயல்படுத்த அரசு உத்தரவு

சென்னை :'பொது இடங்களில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை, கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு, வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது. அதில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
* முகக்கவசம் அணிவது உள்ளிட்ட, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, பொதுமக்கள் பின்பற்ற, கட்டாயப்படுத்த வேண்டும். விதிகளை பின்பற்றாதவர்களுக்கு, அபராதம் விதிக்க வேண்டும்

* மார்க்கெட், பொது போக்குவரத்து என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை, கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், அத்தியாவசிய பணிகளை மட்டும் அனுமதிக்க வேண்டும்
* நோய் கட்டுப்பாட்டு பகுதி மக்கள், மருத்துவ சேவை தவிர மற்ற தேவைகளுக்கு, வெளியில் செல்வது தடுக்கப்பட வேண்டும். அவர்களின் தேவைகளை, மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்ய வேண்டும்

* கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்

* இணை நோய் உள்ளவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணியர், ௧௦ வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை